சண்முக சட்கண்டம் - 13 - கந்த வேலா

நன்மை யுண்டு நாளு முண்டு கந்த வேலா
உன்னைக் கொண்ட உள்ள முண்டு கந்த வேலா
என்னி லுன்னை   ஏற்றப் பின்பு கந்த வேலா
துன்ப மில்லை துயரு மில்லை கந்த வேலா.. 1

வன்மை யுண்டு வீர முண்டு கந்த வேலா
தன்மை யுண்டு திண்மை யுண்டு கந்த வேலா
என்னை வென்று எண்ணம் வைத்தாய் கந்த வேலா
தன்னை வெல்லும் தண்மை வைத்தாய் கந்த வேலா 2

இன்மை தன்னில் இன்பம் தந்தாய் கந்த வேலா
துன்ப மில்லா தூய்மை தந்தாய் கந்த வேலா
முன்னம் செய்த மெய்கள் எல்லாம் கந்த வேலா
பின்னம் சேரா பேறை தந்தாய் கந்த வேலா 3

அன்னை என்னை பெற்ற வேளை கந்த வேலா
அன்பில் என்னை கட்டிக் கொண்டாய் கந்த வேலா
என்பும் தோலும் என்னை  சேர கந்த வேவலா
உன்னை வைத்து உள்ளம் வைத்தாய் கந்த வேலா 4


குன்றை ரெண்டாய் வென்ற வீரா கந்த வேலா
நன்றை நன்றாய் செய்ய வந்தாய் கந்த வேலா
பொன்னை போன்ற பூவாய் நின்றாய் கந்த வேலா
உன்னை கொஞ்சி பாக்கள் செய்தேன் கந்த வேலா 5

சின்னச் சின்ன சித்தம் செய்தாய் கந்த வேலா
புன்ன கைகள்  செய்துச் செய்தே கந்த வேலா
கன்னல் என்றே என்னை தின்றாய் கந்த வேலா 
இன்னல் ஒன்றை இங்கே இல்லை கந்த வேலா.. 6

தின்னத் தின்ன தேனாய் ஆனாய் கந்த வேலா
தென்னைப் பூவாய் வாசம் கொண்டாய் கந்த வேலா
தன்ன சந்தம் தன்னில் நீயும் கந்த வேலா
தன்னை தந்தாய் தாயாய் நின்றாய் கந்த வேலா 7

மன்னன் உன்னை என்னில் கொண்டே கந்த வேலா
பொன்னாய் நீறை பூசிக் கொண்டேன் கந்த வேலா
நன்னாய் நன்னாய் நன்மை தானாய் கந்த வேலா
என்னாய் என்னாய் எல்லாம் ஆனாய்  கந்த வேலா 8

தன்ன தன்னா தன்ன தன்னா கந்த வேலா
தன்னைத் தந்தாய் என்னைக் கொண்டாய் கந்த வேலா
தொன்மை கொண்ட தூய பந்தம் கந்த வேலா
நின்னை கொண்டு நெஞ்சம் வென்றேன் கந்த வேலா.. 9

அன்னை அப்பன் ஆனாய் நீயே கந்த வேலா
தன்னை தந்தே தாய்மை கொண்டாய் கந்த வேலா
பொன்னன் திண்ணன் பொய்யில் மெய்யன் கந்த வேலா
என்னைக் கேட்பின் எல்லாம் நீயே கந்த வேலா 10

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post