நோற்றுவந்தேன் திங்களே தமிழ்சொல்..

ஆற்றுக்கு வந்த வெள்ளமடி உன்மேல்
ஊற்றெடுத்த எந்தன் உள்ளமடி
கூற்றுக்கு ஒப்ப வேதனையை கண்டுமாலை
மாற்றுக்கு நிற்கும் நாள்சொல்லடி
காற்றுக்கு என்னிலை தெரியலையோ
நாற்றுக்கு என்மனம் புரியலையோ
சேற்றுக்குள் புதைவிதை போலிங்கு காதலின்
ஊற்றுக்குள் புதைகிறேன் உன்மன
மாற்றுக்கே விழைகிறேன் உன்னெழில்
நாற்றத்தை  வளியது பரிமாற
தேற்றத்தை பெறுகிறேன் ஒருமுறையுன்
தோற்றத்தில் கொலைபடு பிணமானேன் காதலுயிர்
ஏற்றத்தால் நடமாடுஞ் சவமானேன்..
ஆற்றுபடு வழியொன்றை மொழிவாய் ..
ஏற்றுனை யானாய் காப்பதும் காத்துனில்
போற்றப் பூப்பதும் பிறவிப்பயனாய்
ஏற்றுவந்தேன் அதற்கெனவே வயதுகளை
நோற்றுவந்தேன் திங்களே தமிழ்சொல்..

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم