காய்ச்சல் எனும் கண்ணாளன் - கவிப்போம்.

காய்ச்சலதே எந்தன்  கண்ணாளனே
காய்ச்சலே நீயென் காதலனே.

காத்திருக்கும காலமெலாம் நீ வரவேயில்லை
எதிர்பாராதொரு தருணம் எனை வீழ்த்தும் போர்வீரனே.

தனிமையிலே நானும் தவித்திருந்தேன்
தலைவனிலை ஒரு தகவலிலை.
இந்த பேதைக்கு் மனதுமிலை.

நோய்பிணியா நீ வரும் வரைக்கும்- இங்கே
தேய்பிறையாய் நான் தேய்ந்திருப்பேன்.

வாய்வெளுக்க. எந்தன் விழி சிவக்க - காய்ச்சலே
உனை ஏற்பதற்கே நிதம் காத்திருந்தேன்.

கால்கடுக்க நான் நின்றிருந்தும் 
கண்ணாளன் வருகவில்லை

பார்ப்பவர் அறியவில்லை என் படபடப்பை
காற்றதுவே சாட்சிசொல்லும் என் துடிதுடிப்பை.

நேற்றுவரை உனை பிடிக்கவில்லை
தோற்றுவிட்டேன் நான் நடிக்கவில்லை.
ஏற்றுகொள்வேன் உனை ஆயுள்வரை
தீர்த்துவிடு எந்தன் ஆயுள்தனை.

செல்களெலாம் உனை செல்லமாய் வேண்டுதே.
அம்பெனவே வந்து துளைத்திடு நீ.

ஆம் கண்ணாளன் போலதான் காய்ச்சலும்.

பின்னிருந்து பைய வந்து அணைத்து கொள்கிறது

பூமிக்குள் எரியும் தீயை போல் - அவ்வபோது
என்னுள் எரிந்து கொதிக்கிறது.

கோடை அதன் இயல்பை போல் - எனக்குள்
வாடைகாலம் காதலன் அணைப்பின் உஷ்ணமாய்

உள்ளிருந்தபடியே எனையும் உருக்கும்
விரகதாப வேளை நினைவெனவே.
காய்ச்சலே நீயும் வறுவலாய் எனை வதக்குகிறாய்.

அஞ்சல்கடிதம் போலொரு தூதாய்
அவ்வபோது சில மருந்துகளை அனுப்புவேன்.
எழுத்தறிவிலா  மறமண்டையாய் நீ கண்டுகொள்ளாதிருப்பாய்.

சின்ன சின்ன தோட்டா மாத்திரைகள் தின்றனுப்புவேன்
தொல்லை தருமுனை துளைத்திடுவேன்.

மந்தமாய் நீயிருக்க பத்தியம் கூட இருப்பேன்.
சொந்தமாய் நீவந்தேவிட்டால் என்னாவேனோ.

விளக்கின் தீயை போல் நெற்றியில்
மெல்லியதாய் தொடங்கி மலைபாம்பாய் எனை விழுங்குவாயோ?

காதுமடல் வருடிதான் தலைவன் தலைகோதுதல் போல்
இன்பமூட்டி உள்நிறைவையோ?

தீய ராட்சதனோ?  - நன்மை நல்கும்
நேய தேவனோ?
மனதை திருடும் மன்னவனோ? - இல்லை
உயிரை குடிக்கும் எமனின் உறவினனோ?
யாதென சொல்வேன் பிரிதொரு மனிதனிடம்?..

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post