சண்முக சட்கண்டம் - 22 - முருக பரம்பொருள்

 முருக பரம்பொருள் முகையின் எழிலது முகத்து நிறைபொருள் தெளிவோடு

உருகு மடியவர் உளத்து குளமதில் உவந்து பிறந்திடும் மலையோனே

அருகு மதிநதி அரவம் அணிந்தவர் அறிவின் சுடர்வழி வருவோனே

மருகு மருகென மனது உவந்திட முனகும் அரங்கனின் மருகோனே. 1


விரும்பு வரந்தரு வரத பெருங்குண விரலி கரம்பிடித் தருள்வோனே

அரும்பு முணர்வினை அகிலப் பெரிதென அமைந்து வளர்த்திடும் நெறியாலே

விரும்பு மடியவர் வினையில் விளைபவ விநோத வகைபட வருவோனே

கரும்பு சுவையனை கனிந்த பழமென கடலும் இனத்திடும் கரைக்கோனே. 2


செருக்கை வறுபட செரிந்த மனம்புரி செயலில் வருபவ கரவேளே

இருக்கம் களைந்திட இருந்து துணைபுரி இணைய வினைபுரி வடிவாகி

சருக்கம் எனக்கெதிர் சருக்கி விழவிடை செலுத்தும் சிறப்புடை செகத்தீசா

உருக்கும் துயர்வர உனக்கு பணிந்திட உருகி கரைந்திடும் பெருங்கோனே. 3


இருக்கும் இலதெனும் இருப்பை கருத்துரும் இனியர் கருத்திடை மடிவாரே

பருக்கும் பலவினை பதுக்கும் குணமதை பிதுக்கும் இறப்பினில் துணைசேரும்

எருக்கு மலர்யணிந் தெரியும் நெருப்பினில் எழிலாய் வருவோனே எழுதாத

முருகும் எழிலுமே முதலாய் முடிந்தினி முருகில் எவருமில தெனும்பேறே. 4


கருக்கும் உடலிடை கனக மெனதிகழ் கனன்று ஔிவிட புரிவாயே

ஒருத்த கருத்தினில் ஒருமி உனைநினைந் தொலிசெய் முனிவரின் தலையாய

விருப்பம் நிறைவுற வலிமை தருங்குக விருத்தன் குருபரன் மயில்வீரா

திருத்தம் தருபவ திகழும் திகம்பரன் தெறிப்பில் உருபட வருவோனே. 5


கருத்தி லமர்ந்தெனக் குரைத்த பொருளிருக் கநிலை நிறுத்திட வரவேண்டும்

பருத்த முலைகொழுத் தமது புசித்துணல் பிறவி பிறப்பறுத் தருள்வாயே. 

இருப்பை இலதென இலதை இருப்பென இயக்க முணர்த்திட வரவேண்டும்

கருப்பை முதல்வரு கணக்கை தினங்கழித்து கரும வினைசெழித்து அழியாமல். 6


பருநெல் தனையுரித் திருப்பை குழைந்திளைத் திருப்பை உணவென பரிமாறி

முருங்கை இலையோடு முளைத்த மலரோடு முனைந்த ரசமமைத் துனக்கீவேன்

பிருங்கி ஒருமுறை பிரித்து வணங்கிட பிரிவு அறுபட இணைந்தோரும்

விரும்பும் இளையவ வரதன் இளவலே விளையும் வினையற துணையோனே. 7


மருகும் மனத்தினை மகிழ மனந்தரு முருகு மனமுடை முருகோனே

அருகும் அடியவர் அமர இடந்தரும் அழகு வடிவுடை வனவீரா

பருகும் பொருளென புனையும் கவியென சுவைக்கு உரியவ இறைபாலா

நெருங்கி யுனைதினம் நினைவு மருகிட நினைந்து வழிபடும் மனம்வேண்டும். 8


இரும்பு குணத்தனை இதய மிளகவே இரக்கம் கொடுப்பவா எனக்காக

தருணம் மறந்தினி தனிமை இழந்திட துணையும் வருபவா மலைவீரா

கருணை பெருக்கினில் ககனம் குளித்திடும் கடலை மிகுத்தவா கதிர்வேலா

குருணை அரிசியும் குழைதள் விருதமும் குடிமை பெறுபவா கடம்போனே. 9


இருக்கும் இகபர இருமை நிலையிலும் இணைந்து துணைதர வரவேண்டும்

வருந்தும் வரியவர் வருத்தம் தனித்திட வரங்கள் தருபவா வடிவேலா

அருமை தவமுடை அரிய அறிஞரும் அடியை பணிந்திடும் பெருஞான

பெருமை தருந்திரு தணிகை தலைவனே புலமை பிரியனே பெருமாளே.. 10






Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post