சண்முக சட்கண்டம் - 20 - வினையும் அழிபட

 அவ்விரண்டு வினையும் அழிபட உதவும்

இவ்விரண்டு நிலையும் இலதென படுத்தும்

பவ்வமது களைந்து படையழித் தவனே

எவ்வமது குழைய எதிர்படு பவனே. 1


நவதுளை நினைந்தே நலிந்தது உயிரே

அவதிகள் படவே அதிசரம் கெடவே

பவனென வருவாய் படுதுயர் தடுப்பாய்

நவமரும் அருள நலந்தரு பவனே. 2


இகபர வாழ்வும் இனிதுடன் சேர

சுகபரி பாலா சுமைதணி வேலே

குகவடி வேலா குருபர வீரா

அகமுறை ஞான அருளமு தோனே. 3


அதிசய சரவணா அசபயுள் வருகுணா

சதிசெயும் அவுணரை சகதியில் புதைத்தவா

விதிசெயும் வினைகளை விலக்கிட வருபவா

நதிதரு  பரஞ்சுடர் நுதிபட வருபவா. 4


சுனைபடு பழனியில் சுகந்தர நின்றவா

புனைதமிழ் பழங்குக புரங்குழை வேலவா

நினைமனத் திடையில் நிதம்விதைத் திட்டிட

வினைவர தயங்கிடும் வரைதலை கந்தனே. 5


முனைமுனிக் கறிவினை முதிர்பட அருள்பவா

சினைகருத் துணையென கதிர்படு முருகனே

எனைவுயர்த் திடும்படி எனக்குடன் வருபவா

வனைகரம் பிடித்தவா வடிவுடை குருபரா. 6


பதியொரு பாகமாய் பெறுமுமை 

தருகுகன்

கதியென நாடியே கடம்பனை துணைவரும்

பதியென பற்றிட பதமருள் தருபவா

மதிமுக மொத்ததாய் முருகுடை முகையதே. 7


கசடுகள் நீங்கிட கசப்புகள் ஓய்ந்திட

அசபயுள் சேர்ந்திட அதிசரம் கூடிட

வசம்வரும் மந்திரம் விருத்திக ளாகிட

அசலென என்னுயிர் அசைத்திடும் கந்தனே. 8


உயிரென உறைபவ உடலென விரிபவ

எயிறுடை கணபதி எழுந்தருள் புரிந்திட

வெயிலுடை கதிரென வெளிபட துணைவரு

மயிலுடை முருகனே மணிமுடி முருகனே. 9


வயற்பொழில் திருத்தணி விரும்பிய திருக்கரன்

இயற்தமிழ் இசைத்தமிழ் இனிப்பென சுவைத்திடும்

கயற்கடல் களிப்புடன் கனிந்திட அமர்ந்தவன்

நயற்படு சுடர்தரு நயமுடை முருகனே. 10






Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post