திருக்குறள் சிற்றுரை - அறிமுகம்

திருக்குறள் என்றும் நமக்கு உதவக்கூடியது. அதிலும் நம் வயது கூட கூட இதன் பொருளும் ஆழமும்  கூடுகிறது .

ஒரு இரண்டாம் வகுப்பு மாணவனுக்கும்  முனைவர் பட்ட ஆய்வாளருக்கும் ஒரே நூல் என்பது எழுத்துலகில் பக்தி இலக்கியத்திற்கு மட்டுமிருந்த சிறப்பு. அதனை பொதுநூலில் அமைப்பது என்பது அதிசயம் தான்..

ஆனால் திருக்குறள் அப்படி வலிந்து அமைக்கப்பட வில்லை. அது மனித வாழ்வினை அலசி ஆராய்ந்து அமைத்த ஒரு அடிப்படை கருத்து நூல் . அதனால் இந்த அதிசயம் தானாய் வந்தமர்கிறது.

வள்ளுவரை இன்னார் என்று வகைபடுத்துதல் ஆகாது.  ஞானியையும் இறைவனையும் மதங்களோ சாதிகளோ இனங்களோ கட்டுப்படுத்த முடியாது. அப்படி ஒருவர் வள்ளுவர்.

நாம் எப்போது எந்த சிக்கலில் சிக்கினாலும் விடைதரும் ஒரு அடிப்படை அறத்தினை கையகப் படுத்திய நூல் திருக்குறள். வள்ளுவம் என்னும் உலகம் பொது மறை தான் முதன்முதலாக உலகின் சகலமானவர்க்கும் பொருந்தப் படைத்த அறம் சொல்லும் நூல்.

தன்னை தானே தர்க்கத்தில் தாக்கிக் கொள்ளும் நூல் . காலங்கடந்த நூல்கள் எல்லாம் இப்படிதான். என்றாலும் குறள் தமிழிலக்கியங்கள் அத்தனைக்கும் குருவாக விளங்குகிறது என்பது படித்துணர்ந்தவர் நிச்சயமாக சொல்வர்.

அத்தகு மதிப்புடைய குறளுக்கு உரைசெய்ய விரும்பிய என் விருப்பமே இங்கு இனி கிடைப்பன.

அதற்கு முன் எனக்கும் முன்பு உரைசெய்த அனைத்து உரையாசிரியர் பாதம் பணிந்து குருவாக பணிந்து துவங்குகிறேன் என்ற உரையே இக்கட்டுரை.

பரிமேலழகர். முவரதராசன் . சாலமன்பாப்பையா . புலியூர் கேசிகன் . யாழ்பாண நமசிவாயதேசிகர். ஆறுமுக நாவலர். எழுத்தாளர் சுஜாதா.  மறைமலை அடிகளார். உவேசாமிநாதர். கு முத்துசாமி ஐயங்கார் . மீனாட்சி சுந்தரம்பிள்ளை . அவ்வை நடராஜன். இலங்கை ஜெயராஜ். கலைஞர் கருணாநிதி . எஸ் மேகநாதன். என பெயர் பட்டியலில் இடம்பெறாதும் குறளமுதை கரந்து தந்தவர்கள் அனைவரின் பொன்னடி போற்றிப் பணிகிறேன்..

இத்தனை மகான்கள் ஆசான்கள் உரைசெய்த பின்னும் உரைசெய்யும் விருப்பம் வர காரணம் அதன் பன்முக தன்மை தான்.. நிச்சயம் உங்களை கவரும்படியான உரையாய் இருக்கும்.

நன்றி.




Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post