சண்முக சட்கண்டம் - 3 துணையறியான் தேடற் பதிகம்

 நூறாம் பறிவி நோயாய் பெற்றேன்

பேறாம் பிறவா பேரைத் தேடி

கூறா வினைகள் கூடா வண்ணம்

ஆறாம் துணையை அன்பால் கண்டேன் 1


சீராம் குணங்கள் சொல்லக் கேட்டே

நேராய் வளரும் நேர்மை கொள்ள

ஓராய் நகரும் ஒற்றை நெஞ்சை

ஊரார் விழையும் உண்மை ஒன்றே 2


மாறும் விதியில் மாறா வண்ணம்

கூறும் விடையை கேளா திங்கே

நாறும் பிணத்தில் நாட்டம் வைத்தே

ஈறும் நெருங்கும் ஈனம் கொண்டேன் 3


நீராய் நிலமாய் நெருப்பாய் நின்றே

நேராய் நிலையாய் நினைவில் நின்ற

ஓரான் எனையே ஔியுள் வைத்து

தீரா அறிவை தருவாய் என்றே 4


யாரைக் கேட்பேன் யாரை நோவேன்

ஊரைத் தேட ஊராய் ஆனாய்

கூரை யில்லாக் கூடல் உள்ளே

தாரைச் சிந்தித் தூயன் ஆனேன்.. 5


நத்தை முதுகில் நிற்கும் உலகாய்

சித்தம் தெளியா சிந்தை அறியேன்

மத்தை கடைய மிக்கும் தயிராய்

வித்தை அறியா விந்தை இதுவே 6


வந்து வந்து விரைவில் போக

நொந்து நொந்து நிறைவும் போக

வெந்து வெந்து விறகே தீர

இந்த விந்தை இறப்பும் ஏனோ. 7


குற்றம் செய்தே குன்றும் புண்ணியம்

சுற்றம் சேர்த்தே செய்கும் தீவினை

முற்றும் தீர்க்கும் மார்க்கம் ஏதென

சுற்றும் என்னை சற்றே காணாய் . 8


ஒருநாள் உன்னில் ஒருங்கே அமைய

வருநாள் தன்னில் வலமே வரவே

திருநாள் தன்னில் தவமே புரிய

வருவாய் நீயும் வருவாய் அறியேன். 9


குளத்தே நீந்தும் குறவைக் கூட்டம்

குளத்தை நீங்க குழைந்தே போகும்

வளத்தை தந்தாய் துணைக்கே வாராய்

தளத்தை நீங்க திறமை தாராய் . 10





Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post