நீ நான் - கவிப்போம்

 சிறகு இல்லா தேவதை 
உன் கையால் என்னை வதை..


பூமத்திய ரேகையை அளக்கிறேன் 
உன் கைரேகையில்

கற்பாறை நான் - விழும்
மழைத்துளி நீ - உன் 
உரசலில் சிற்பமாகிறேன்

 நீந்தும் மீன் தான்
நீவிடும் தூண்டிலில் சிக்க

#நீண்டநாள் ஆசை

முக்கால் பாகம் நீர் தான்
எஞ்சிய கால் நான் எனும் நாம்.

களத்துமேட்டில் கதிரிருக்க
கட்டுரை போட்டி வைக்கிறாய் #நீ

இருண்ட பெருவெளியில்
தூரத்து விண்மீனில்
எரிதழல் சூழ் வட்டத்தில்

நறுமுகில் நீ வெறும்புகை நான்.


 இதிகாசக் கவிதைகள் நீ
அணுவணுவாய் ரசித்து கற்கும் சிறுவன் நான்


பிரவாக கங்கை நீ
உனை தாங்கும் சடையோன் நான்..

 மீச்சிறு நுண்ணியமாகி
ஓரணு துகளெனவாகி
சீருள கருவதனில்

பேருள சக்திகளுடன்
ஓய்வென வாழ்வோம் வா..


உயர்ந்த மரக்கிளையில்
ஒரேயொரு பூவதன் தண்டில்
இருபால் மகரந்தமாக

ஏதோ ஒரு வண்டுவர காத்திருக்கிறோம்


கற்றை வெயில்
ஆறுதல் நதி
கொட்டும் மழை

கோபப் புயல்
முட்டும் இடி
குளிரும் பனி
யாவிலும் நீ
யாவுமாய் நீ...


மோகாமிர்த குடமே
காமசோம பானமே
தூயஇன்பப் புனலே

நேயக்கரையுடை கடலே 
போதுமடி நீயெனக்கு..


கருவறை உறைந்திருக்கும்
விக்ரகம் நீயானால்
விரும்பி நிதம் ஆராத்திக்கும் பூசாரி நான்


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post