துறவறவியல் - கள்ளாமை

கூடாத ஒழுக்கம் பற்றி பொதுத்தன்மையாக சொல்லிவந்த பேராசான் இனி அவைகளின் பெரும்பான்மையினை செய்யாவண்ணம் உற்று உணர்த்த செய்கிறார் பேராசான்.. 

281. எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

உரை: ஒருவனை எவரும் இழிவாக பேசாமல் இருக்க வேண்டும் என்றால் அவன் எதன் காரணமாகவும் பிறர் பொருளை திருடுவதை மனதிலும் கூட எண்ணாமல் இருக்க வேண்டும். 


282. உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வே மெனல்.

உரை: பிறர்பொருளை திருட்டுத்தனத்தால் திருடலாம் என்று மனதால் நினைப்பது கூட தீயதே.

283. களவினா லாகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும்.

உரை: திருடுவதால் பெறுகிற செல்வம் அளவில்லாததாக ஆவது போலவே அழியும். 

284. களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்.

உரை: திருட்டின் மீதான ஆசை  வரும் விளைவினால் போகாத  துன்பமே தரும். 


285. அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்.

உரை : ஒருவர் ஏமாறும் சமயம் பார்த்து திருடக் காத்திருப்பவர் எப்போதும் எவருக்கும் அன்புடையவனாக மாட்டார்..

286. அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

உரை :  திருட்டின் மீது தீராத ஆசை உடையோர்  குறிப்பிட்ட அளவினோடு நின்று விடமாட்டார் .

287. களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்க ணில்.

உரை : திருட்டு என்னும் குறைந்த அறிவுடையோர் அறம்பற்றி தன் அளவில் வாழும் ஆற்றல் தெரிந்தவராய் இருப்பது  இல்லை.


288. அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.

உரை: பலரோடும் இணைந்து வாழ்பவனின் நெஞ்சில் நன்மை நிறைந்து இருப்பது போல . திருடர்கள் மனத்தில் வஞ்சகம் நிறைந்து இருக்கும். 


289. அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.

உரை: திருட்டை விட்டு திருந்தி வாழாதவர் அத்திருட்டினாலேயே அழிவர். 


290. கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு.

உரை:  திருடுவாரை  உயிர்கள் வெறுத்து ஒதுக்கும்.  திருடாதவரை எவரும் வெறுத்து ஒதுக்க மாட்டார்

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post