இல்லறவியல் - ஒப்புரவறிதல்

சமூக வாழ்வில் பிறர்க்கும் பயன்படும் படி உதவி வாழ்தல் என்னும் நற்குணம் குறித்து விளக்குகிறார் பேராசான்.

211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு.

உரை : கைமாறு கேட்காமல் கடமை செய்யும் மழைக்கு தான் என்ன பதில் செய்திடும் உலகு . அதுபோல் கைமாறு பாராது உதவுக.

212. தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

உரை : நான் உழைத்து சேர்த்த பொருளெல்லாம் முடியாதார்க்கு உதவுவதற்கே என்று எண்ணுக.

213. புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.

உரை : உதவுதலை விட நல்லது என மற்றொன்று என்றும் புதிதான ஏழு உலகங்களும் தந்தாலும் பெறுவது கடினம்.

214. ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

உரை : இல்லாதவர்க்கு உதவி வாழ்பவனே உயிர் வாழ்கிறவன் ஆவான் மற்றவர் செத்தவராக கருதப்படும்.

215. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

உரை : ஊர் குளம் நிறைந்தது போலவே உதவுபவனிடம் இருக்கும் செல்வம் உலகத்திற்கானது .

216. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.

உரை : கனிகள் தரும் மரம் ஊருக்குள் பழுத்திருப்பது போலதான் அறமுடைவனிடம் இருக்கும் செல்வமும். ஊருக்கு நன்மை செய்வது.

217. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.

உரை : மருத்துவ மூலிகை மரம் போன்றது  பெரும் குணம் கொண்டவனின் செல்வம். ஊரார் துயர் துடைத்து தேவை தீர்க்கும்.

218. இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்.

உரை : ஒப்புரவை அறிந்து செயல்படுவார் தான் வறுமையில் இருந்தாலும் பிறர்க்கு உதவுவார்.

219. நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யா தமைகலா வாறு.

உரை: பிறர்க்கு உதவ முடியாமல் வருந்தும் போதுதான் ஒரு ஒப்புரவாளன் வறுமை அடைகிறான். ஏனெனில் கடைசிவரை அவர் முயன்று உதவுவர் என்பதால் .

220. ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.

உரை: உதவுதலால் ஒரு துயர் வருமானால் தன்னை விற்றாவது அத்துயரை பெற்று பேரடைய வேண்டும் ..


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post