எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி?.

எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி?.


நம்மில் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்க ஆசைதான் . அந்த ஆசைதான் நம்மை எதிர்காலம் நோக்கி நகர்த்துகிறது. அந்த நகர்வே வாழ்க்கையாகிறது.. அந்த வகையில் மகிழ்ச்சியே வாழ்க்கை என்றாகிறது.. 


நம்மில் ஒருநாள் ஒரு மணி ஏன் ஒரு நிமிடம் கூட மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்று யாருமில்லை.. ஆம் நாம் மகிழ்ச்சியாக தான் இருக்கிறோம். ஆனால் எப்போதாவது தான் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதாவது மகிழ்ச்சி என்பது நம்மின் உணர்ச்சியாக இருக்கிறது. ஆனால் மகிழ்ச்சி என்பது உணர்ச்சி மட்டும் தானா? என்றால் இல்லை என்கிறது இலக்கியங்கள்.. 


ஒரு மலரை மகிழ்ச்சி என்று கொள்வோம் மலர்வது என்பது ஒரு செயல் அந்த மலர்தலை மகிழ்ச்சி என்று நாம் நம்புகிறோம்.. ஆனால் வாடிவிழும் வரை மலர் என்பது மலர்ந்தே இருக்கிறது அதாவது மகிழ்ந்தே இருக்கிறது .. எப்படி மலர்ந்திருப்பது மலரின் இயல்போ அதுபோல் மகிழ்ந்திருப்பது மனதின் இயல்பு.. 


ஆம் மகிழ்ச்சி மனதின் அடிப்படை இயல்பு.. இந்த அடிப்படை இயல்பு தான் குழந்தையை மகிழ்வாகவே வைத்திருக்கிறது..  



மகிழ்ச்சி இருவகையாக சொல்லலாம்

  1. அக அல்லது உள் மகிழ்ச்சி - ஆனந்தம்

  2. புற அல்லது வெளி மகிழ்ச்சி..  - சந்தோஷம்


அக மகிழ்ச்சி என்பது நம் மனதின் பிறவி இயல்பு .  புற மகிழ்ச்சி என்பது வெளி நிகழ்வுகள் நமக்கு தருவது . உதாரணமாக ஒரு காமடி காட்சி நமக்கு மகிழ்ச்சியை தரும் . மழை மகிழ்ச்சியை தரும்..  


சரி இப்படியான நிகழ்வுகள் தரும் மகிழ்ச்சி சில நேரங்களுக்கானது மட்டுமே. ஆனால் மகிழ்ச்சி என்பது நம் இயல்பு என்று சொன்னேன் அல்லவா..


நம் பிறவி இயல்பாய் இருந்த மகிழ்ச்சியை நாம் நமக்குள் கொன்று குவிக்கும் நிலைதான் இன்று நடக்கிறது.. அநாவசிய சிந்தனைகள் அதைபற்றிய கவலைகள்  எதிர்பார்ப்புகள் என்று குப்பையாக கொட்டி அந்த மிகழ்ச்சியை அழுகசெய்கின்றோம்.. 


உதாரணமாக ஒருவன் சிறப்பான உணவை எதிர்பார்க்கிறான். அது அவனுக்காக தயாரிக்கப் படுகிறது. அந்த நேரத்திற்குள் அவன் - ஐயோ இந்த உணவு சிறப்பாக வருமா? இல்லை எதாவது கூடி குறைந்து சுவை இல்லாமல் போகுமா? அது கீழே கொட்டாமல் கைக்கு கொண்டு வரப்படுமா? என்று எண்ணி கவலை கொள்கிறான் . வந்தபின் இவன் தேடிய சுவை இருக்கிறதா? இல்லை மோசமாக இருக்கிறதா.? என்று ஆராய்ந்து பதைக்கிறான்..  ஒருநாளின் சுமார் அரைமணிக்குள் எத்தனை தேவையற்ற கவலைகள் , சந்தேகங்கள்.. இவையெல்லாம் அவன் இயல்பான மகிழ்ச்சியை கெடுக்கின்றன.. 


புற மகிழ்ச்சி என்பதில் நாம் தேடிக்கொண்டிருக்கிறோம் . அகமகிழ்ச்சியை மறந்தே போகிறோம்..  கவலைகளை சந்தேகங்களை ஏக்கங்களை தவிர்க்கும் போதே நம் இயல்பான மகிழ்ச்சி வெளிப்படுகிறது… 


சமைக்கத் தெரியாதவன் உணவிற்கு ஒருவரை எதிர்பார்ப்பது போல .. நாம் மகிழ வேறொன்றை தேடுகிறோம் . நமக்கான மகிழ்ச்சியை நாமே சமைக்கலாம் என்பதை கவனிக்க மறக்கிறோம்…


இதற்கான அடிப்படை தேவை ஒன்றிருக்கிறது அது தான் ரசனை.. நம்மில் பலருக்கு ரசனை என்பதே இல்லாமல் போய்விட்டது..


 அதோ பார் நிலா என்றால்.. 

 ஆமா நிலா அதுகென்ன இப்ப என்னும் மனிதர்களாகி விட்டோம்..  இந்த ரசனை வளர வளர மகிழ்ச்சியும் வளரும்.. 


காணும் யாவையும் ரசித்து கொண்டாடுபவனுக்கு மகிழ்ச்சியை யாரும் தரவேண்டியதில்லை.. அவனுக்கான மகிழ்ச்சியை அவனே சமைக்கிறான்.. 


தெருவில் ஏதோ குழந்தை கையசைத்தால் ரசித்து கொண்டாட அது உங்கள் குழந்தையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.  மழையை கொண்டாடுங்கள்.  நிலவை கொண்டாடுங்கள்.. 


விளையாட்டை வேடிக்கை பார்ப்பவனுக்கு விளையாட்டின் எந்த பிரச்சனையும் கவலையும் தேவையில்லை . ஏனெனில் விளையாட்டின் இரண்டு முடிவுக்கும் அவன் தயார் தான் எது நடந்தாலும் கொண்டாடுவான் அதுபோல வாழ்க்கை விளையாட்டை வேடிக்கை பார்த்து கொண்டாடுங்கள்.. .. 


எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கலாம்.. 

1 Comments

  1. Super energitic content I want many more content like this.

    ReplyDelete

Post a Comment

Post a Comment

Previous Post Next Post