முருக தத்துவம்

 

மோனக் குணத்தினில் ஞானம் விதைத்த குரு தட்சிணாமூர்த்தி திருவருள்… 


என்னை அறிந்தோர் யாவரும் என் முருகனை முருக நேசத்தை அறிவர். ஆனால் என் முருகன் யார் என பலருக்கு விளக்க நினைக்கிறேன்..


ஆம் தத்துவங்களாய் முருகன்… முருக தத்துவம் அல்லது முருக சித்தாந்தம் . என்பது என்ன? அது எப்படி நம் வாழ்வை நெறிபடுத்துகிறது? இந்த கேள்விகளே இக்கட்டுரையானது.. 


முருகன் என்றால் அழகன் என்கிறது அன்னை தமிழ்.  அவனே தமிழின் கடவுள் என்றுது தமிழ்.. ஆம் முருகன் அழகன் இளைஞன் என்றும் முதுமை எய்தா முதல்வன்.. தமிழும் அப்படியே என்பதால் அவன் தமிழ் கடவுள்.  அந்தவகையில் தமிழ் முருகனை தனது ரசனையின் வெளிப்பாடாக காட்டுகிறது.. அதனால் தான் தன் குடியிடம் அத்தனையிலும் முருகனே வருகிறான்.. அது இலங்கையானாலும் சரி மலேசியாவானாலும் சரி.. 


அதுபோலவே தமிழ் திணை என பிரிக்கும் அத்தனை வாழ்விலும் அவனே தலைவனாகிறான்.. மலை வாழ்க்கை குறிஞ்சிக்கு குறிஞ்சி ஆண்டவனாய் , வயல்நிலை மருதத்திற்கு முருகனாக, காட்டுவாழ்க்கை முல்லைக்கு முல்லை வேந்தனாய், பாலையின் போர் தெய்வ ஏரகனாய், கடலாடும் செந்தூர் செந்திலாய்.. அவனே தலைவனாகிறான்.. அவன் அவ்வாழ்வின் அழகியலை ரசனையை வெளிபடுத்தும் கொணடாடும் ஒருவனாக இருக்கிறான்.. ஆகயால் முருகன் தத்துவநிலையில் ரசனை அழகியல் உணர்வு என்போம் நாம்… 



அவன் பறத்தலுக்கு பெயர்போனவன் ஆம் ஞான மாம்பழத்துக்கு உலகை சுற்றியவன். அவனது மயிலும் அழகின் வெளிப்பாடல்லவா?. அந்த பறத்தலின் ஆதாரமாக அட்டாங்க யோக சித்த வித்தை அறிந்தவனாய் சித்தநாதனாய் இருக்கிறான்.. அவனே சித்த பரம்பரையை துவக்கி நடத்துகிறான். அகத்தியருக்கு மொழி மற்றும் அறிவியலை விளக்கும் தலைவனாகிறான்.. குருவாகிறான் அதனையே  உருவாய் அருவாய் உளதாய் இலதாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்கிறார் அருணகிரியார்.. உரு அரு உள இல என விளையாடும் சித்த வித்தை அருளும் குருவாய் வா என்றழைக்கிறார்… அந்த வித்தையின் மூல ஞானியாக திகழ்கிறான் முருகன்.. இங்கு யோக சின்னமாக சக்தியின் வடிவமாக வேலை காட்டுகிறான் முருகன். ஆக யோக குருவாக வவெளிபடுத்துகிறது தமிழ். 


வித்தை மட்டுமல்ல வித்தை வளர்க்கும் வேள் ஆண்மை அறிந்து வேளாண்மை செய்கிறான் . மருதநிலத்தின் குன்றமர்ந்து குடியாட்சி செய்யும் முதல் வேந்தன் என்று நிற்கிறான்.. இணை கூடலின் இன விருத்தியின் அவசியம் மற்றும் நெறியறிந்து கந்தனாக விரிகிறான். அந்த ஆண்மையின் சின்னமாக வேலை தாங்கி நிற்கிறான்.. ஆக இன விருத்தி மற்றும் விவசாயம். வளர்த்த முதல்வனாய் தமிழனாய் முருகன் நிற்கிறான்.. 


போர் என்று வந்தால் படையதிர கொடி உயர நொடியதனில் வெடியெனவே எதிரிகள் உடல்சிதற செய்யும் பெரும் வீரனாக போர் வேலோடு நிற்கிறான் சரவணன். அங்கே அகிலத்தையே வெல்லும் ஆயுதமாக வேல் காட்டப்படுகிறது.. இங்கே வீரத்தின் அடையாளமாக காட்டப்படுகிறான். 



இவை அனைத்திலும் அறம் வளர்த்த அதிமுதலாய் முதியிலனாய் காட்டப்படும் முருகன் என்றால்.. தத்துவ ரீதியாக வாழ்தலை விரும்பும் ஒன்றாக அமைகிறது.. ஞானத்தை வளர்க்கும் மார்க்கமாக இருக்கிறது. அதிலும். இந்த வேல் விந்தணுவின் வடிவமாக சொல்லப்படுகிறது.  ஒரு விந்தணுவில் நம் பரம்பரை பரம்பரையான ஞானத்தை கடத்த முடிகிறதென்றால் நமக்கு வேல் சொல்லும் குறியீடு என்ன?. அகத்தியர் திருமூலர் கோரக்கர்போகர் பதஞ்சலி எனஅனைவரும் விந்தணுவை கட்டுக்குள் வைத்து சித்தி பெறும் வகைமை சொல்கின்றனர். அந்த வகையில் விந்தணுவை கட்டி அவன் சித்தி பெற்றகுறியீடாக வேல் இருக்கிறது எனலாம்.. 


அறம் என்கிற வகையில் இன விருத்தி இன வளர்ச்சி இன பாதுகாப்பு மற்றும் இன ஞான முன்னேற்றம் என பரவும் ஒரு நெறிபட்ட பண்பாட்டின் அடையாளமாகவே முருகன் இருக்கிறான்.. ஒரு குழந்தையின் அழகும் ஒரு வீரனின் பலமும் ஒரு ஞானியின் திறமும் கொண்ட முருகன் தமிழின் அழகியல் உணர்வியல் அறிவியல் ஆன்மவியல் வெளிப்பாடாக நிற்கின்றான். 


ஆக முருக தத்துவம் எனில். அறம் , விருத்தி ,வளர்ச்சி, பாதுகாப்பு, ஞானம்.. அதாவது அறத்தின் வழி பெருக்கம், அரசு வளர்ச்சி, அரசின் வழி படையும் பாதுகாப்பும், பாதுகாப்பின் வழி ஞானமும் என்கிறதாகிறது.. 


அதாவது பிறந்த உயிர் இயற்கை மற்றும் மனித குழுவுடன் இணைந்து இயைந்து வாழ்வது. 


பிறப்பின் வழி இன பெருக்கத்தால் அறம் வளர்க்க உதவுவது. 


உழைப்பினால் உணவு பாதுகாப்பு உடல்நிலை என வளர்ச்சி செய்வது


பிற சமயங்களில் சித்த ஆன்ம மார்க்க பயணத்தில் சித்திகளை பெறுவது இதனால் ஞானம் அடைவது. 


அந்த விடயமே தமிழ் தன் பண்பாடாக கொண்டுள்ளது.. திருக்குறள் திருமந்திரம் என சொல்வது இந்த தத்துவ மார்க்கமாகவும் இருக்கலாம். 


கடவுள், வான் சிறப்பு , ஒப்புரவு - என இயற்கையோடு இணைந்து வாழ்தலை சொல்கிறது.. 


உழவர் பெருமையும் உணவும் என - உழைப்பையும்


பகைமாட்சி படைமாட்சி என பாதுகாப்பையும்


குடியியல் என அரசியலையும்


கூடலறம் என இன விருத்தியையும். 


திருக்குறள் முன்வைக்கிறது.. 



இவ்வகையில் என முருகன் அறுமுகன் ஒருவன் தலைவன். ஞானம் கொண்டவன். அந்த ஞானம் பல்துறை வெற்றியை தருகிறது.. அவன் எனக்கு குருவாய் நண்பனாய் அவ்வபோது ஞானம் சொல்கிறான்…  ஆதலால் சொல்கிறேன். தமிழும் குகனும் இருவேறு அல்ல.. 


இறுதியாக ஒன்று தமிழிடம் வாழ்க்கையின் அவசியம் என்ன என்ற போது இருத்தலும் கொண்டாடுதலும் என்றது. அழகியலாகட்டும் இசையாகட்டும் பாடல் ஆகட்டும் ஆடல் ஆகட்டும். முருகனே கொண்டாடப் படுகிறான்.  ஆம் பேட்டை துள்ளல் வெறியாட்டம் ஒயிலாட்டம் காவடி ஆட்டம் எல்லாம் வேலவன் புகழ்பாடும். சிந்து , சந்தம் எல்லாம் முருகனைப் பாடும். 


ஒட்டுமொத்தமாக முருகனை தத்துவமாக பார்த்தால் தமிழும் குகனும் காட்டும் ஒற்றை நெறி. வாழ்வில் நிலைத்து இருத்தலும் இயங்குதலும் சுகித்தலும் கொண்டாடுதலும் ஆகும்.. 












Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post