தூண்டிலில் சிக்கிய பறவைகள்

சென்ற நூற்றாண்டின் கனவுகளில் மிதக்கிறேன்..
அன்று அத்தனை எளிமையாக இருந்தது.
நின்று கீச்சும் குருவிகள் அணில்கள்
இன்று அவைகள் எலக்ட்ரானிக் ஆகின.
பத்து பைசாவே பெருஞ் சொத்து
கெத்தாய் திரியும் அளவு உடைத்து
கொத்து பரோட்டா கூட இரண்டறை ரூபா
கொத்து புளியாங்கா இருபது பைசா.
முகநூல் இல்லை செய்திச் சேனலில்லை
அகமே நூலாய் இருந்தது நூலில் இருந்தது.
முகம் பார்த்து காதல் மலர்ந்தது
ககனமே விளையாட்டுக்கு வந்தது பட்டமாய்..
நிதமொரு கீச்சிடும் நிமித்தங்கள் இல்லை
விதவிதமாய் பேசிடும் பதிவுகள் இல்லை
குமுதமோ விகடனோ அன்றி கவிதைக்கு
குமுகாயம் இருந்ததில்லை இன்றைக்கும் அதுசொர்க்கம்..
வயம் கொள்ள வாழ்வே இருந்தது
பயம் கொள்ள பேய்கள் இருந்தது
நயம் சொல்ல நாடகம் இருந்தது
அயம் அறியா உலகமா யிருந்தது
இன்றோ.
வேளைக்கு ஆறு பதிவு மூன்று கீச்சுகள்
மூளைக்கு போகாத முக்கால் கருத்துக்கள்
எந்திர கடலது விட்ட. தூண்டிலில்
சிக்கிய பறவைகள் நாம்..


0 Comments

WRITRING , POET , DEVOTIONAL THOUGHTS